பக்கங்கள்

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

கடவுளின் கருணையை கற்றுக் கொள்வோம் – திருத்தந்தை


 கடவுளின் கருணையை கற்றுக் கொள்வோம் திருத்தந்தை

கருணை என்பது உரையாடல் கலாச்சாரத்தின் ஒரு முக்கியமான அங்கமாகும். அமைதியாக, உடன்பிறந்த உறவில் வாழ உரையாடல் இன்றியமையாததாக அமைகின்றது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2022 டிசம்பர் 31-ஆம் தேதி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற ஆண்டு நிறைவு நன்றி வழிபாட்டிற்குத் தலைமை தாங்கினார். திருஅவையின் புனித நிகழ்வுகளுள் ஒன்றான தெதேயும் என்னும் நன்றிவழிபாட்டுத் திருப்பாடல்கள் பாடப்பட்ட நிகழ்வில் மறையுரையாற்றிய திருத்தந்தையின் கருத்துக்களாவன.

 "ஒரு பெண்ணிடம் பிறந்தவர்" (கலா 4:4).

காலத்தின் நிறைவில், மனிதராக உருவெடுத்த கடவுள் உயரமான வானத்திலிருந்து உலகத்திற்கு வரவில்லை. மாறாக மரியாவிடமிருந்து பிறந்தார். அவர் ஒரு சாதாரண பெண்ணுக்குப் பிறந்தவர் அல்ல, பெண்ணிடம் இருந்து பிறந்தவர். கடவுள் அவரைப் பயன்படுத்தவில்லை மாறாக அவரது தசையை உடலைப் பெற விரும்பி, ஆகட்டும் என்று அன்னை மரியாவின் அனுமதி பெற்று மனுஉரு எடுத்தார். ஜென்மப்பாவமின்றிப் பிறந்த மரியாவின் கருவிலிருந்து, கருணை, அன்பு, உண்மை, நம்பிக்கையால் நிறைக்கப்பட்ட, பாவத்திலிருந்து விடுதலை பெற்ற மனித குலத்தின் கர்ப்பகாலப் பயணம் தொடங்கியது. நல்ல அழகான, மற்றும் உண்மையான மனிதநேயம், கடவுளின் சாயலினாலும் விருப்பத்தினாலும் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சாயல் அன்னை மரியாவின் சம்மதத்துடன், அவர் வழியாக இன்றும் என்றும் எப்போதும் சுதந்திரமாக, இலவசமாக மரியாதையாக அன்பாக வழங்கப்படுகின்றது.

உலகிலும், வரலாற்றிலும் நுழைவதற்குக் கடவுள் தேர்ந்தெடுத்த இந்த வழி அவர் வருகையைப் போலவே மிகவும் சிறப்பானது. அன்னை மரியாவின் தெய்வீகத் தாய்மை, கன்னித் தாய்மை, கனிவான கன்னித்தன்மை போன்றவைகள் கடவுளின் மிகுந்த மரியாதையையும் நமது மீட்பையும்  வெளிப்படுத்தும் வழியாக அமைகின்றது. புனித அகுஸ்தீனார் கூறுவது போல, நம்மைப் படைத்தவர், நம் ஒத்துழைப்பு இல்லாமல் நம்மை மீட்க விரும்பவில்லை. அவர் நம்மைக் மீட்பதற்குத் தேர்ந்தெடுத்த வழியில் புதிய, சுதந்திரமான, சமத்துவமான மனிதநேயத்தைத் தொடர்ந்து உருவாக்க, அவரைப் பின்தொடர நம்மையும் அழைக்கிறார். சமத்துவமான மனிதநேயம் என்னும் வார்த்தை நமது வாழ்வின் நடைமுறையாக மாறி, மாண்போடு வாழும் மனித நற்பண்புகளின் பன்முகத்தன்மையைப் பெறுகிறது. இந்த நற்பண்புகளில் ஒன்றான கருணை, உடன்பிறந்த உறவு,  மற்றும் சமூக நட்பை வளர்க்கும் ஒரு வாழ்க்கை முறையாக அமைகின்றது.



 கருணையைப் பற்றி பேசுகையில், டிசம்பர் 31 ஆம் தேதி காலை நம்மை விட்டு பிரிந்த அன்பான முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களை என் மனம் நினைவுகூர்கின்றது. அவர் உயர்வானவர், அன்பானவர் என்பதை எண்ணி, திருஅவைக்கும் உலகிற்கும் அவரைக் கொடையாகக் கொடுத்தக் கடவுளுக்கு நன்றி கூறுகின்றேன். அவர் செய்த அனைத்து நன்மைகளுக்காகவும், குறிப்பாக, அவரது நம்பிக்கை மற்றும் செபத்தின் சான்றுள்ள வாழ்விற்காகவும் கடவுளுக்கு நன்றி செலுத்துகின்றேன். திருஅவையின் நன்மைகளுக்காக அவர் செய்த தியாகம், அவரது பரிந்துரைகளின் மதிப்பு மற்றும் வலிமையை கடவுள் மட்டுமே அறிவார்.

 

உரையாடல் கலாச்சாரத்தின் முக்கிய அங்கம் கருணை

கருணை என்பது உரையாடல் கலாச்சாரத்தின் ஒரு முக்கியமான அங்கமாகும். அமைதியாக, உடன்பிறந்த உறவில் வாழ உரையாடல் இன்றியமையாததாக அமைகின்றது. ஒருவருக்கொருவர் செவிசாய்த்து, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு ஒருவரையொருவர் முன்னோக்கிச் செல்ல முயற்சி செய்யுங்கள். பொறுமையான உரையாடல்களால் குடும்பங்களையும் சமூகங்களையும் ஒன்றாக வைத்திருக்கும் பல தாராள மனம் கொண்ட நபர்களும் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். நிலையான மற்றும் உறுதியான உரையாடல்கள் தலைப்புச் செய்திகளை உருவாக்காது, ஆனால், உலகம் அமைதியாக சிறப்பாக வாழ உதவுகின்றது. உரையாடலின் ஒரு பகுதியான கருணை,  நல்ல செயல்பாடு மட்டுமல்ல அது நமது வாழ்க்கை முறை. நமது சமூகங்களை மனிதமயமாக்க, ஒவ்வொரு நாளும் மீட்டெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒரு நல்லொழுக்கம் கருணை.

தனிநபர்  நுகர்வுச்சமூகம்

தனிநபர் நுகர்வுச் சமூகம் நம்மைச் சுற்றியுள்ளவர்களை நமது அமைதிக்கு, நமது நல்வாழ்வுக்குத் தடையாகக் கருதவும் மற்றவர்களை, அசௌகரியப்படுத்துகிறவர்களாக இடையூறு செய்பவர்களாக பார்க்கும் சூழலையும் உருவாக்குகின்றது. நாம் விரும்பியதைச் செய்வதற்கான நேரத்தையும் வளங்களையும் கொள்ளையடித்து மற்றவர்களைப் போட்டியாளர்களாகக் காணச்செய்கின்றது. நம்முடைய இந்த சமூகங்களுக்குள்ளேயும், நாம் எதிர்கொள்ளும் மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் கூட, கருணையோடு வாழும் மனிதர்கள் இருளில் ஒளிரும் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்கின்றார்கள்.

புனித பவுல், கலாத்தியர்களுக்கு எழுதிய திருமுகம், தூயஆவியின் பலனைப் பற்றி பேசுகையில் பயன்படுத்தும் chrestotes என்ற கிரேக்க வார்த்தை கருணையை குறிக்கின்றது. கடினமான முரட்டுத்தன்மையைத் தவிர்த்து, மற்றவர்களை ஆதரித்து ஆறுதல் தரும் கருணை மனப்பான்மை, நமக்கு அடுத்திருப்போரை வார்த்தைகள் அல்லது செயல்களினால் புண்படுத்தாமல் பார்த்துக்கொள்வதற்கான ஒரு வழி. மற்றவர்களின் சுமைகளைக் குறைக்க, ஊக்கப்படுத்த, ஆறுதல் தருவது. அவமானப்படுத்தவோ, இழிவுபடுத்தவோ எண்ணாதது.

கருணை என்னும் மருந்து

ருணை என்பது நமது சமூகத்தின் பல நோய்க்குறியீடுகளுக்கு எதிரான மருந்தாகும்: கொடுமைக்கு எதிரான மருந்து.  கவலை மற்றும் கவனச்சிதறலுக்கு எதிரான மருந்து. இது நம்மில் நாம் கவனம் செலுத்தி மற்றவர்களை மறைக்கும் நிலைக்கு எதிரான மருந்து. உதவி, மன்னிப்பு, நன்றி போன்றவற்றைக் கேட்க இயலாமல் செய்யும் சமூக நோய்களிலிருந்து நம்மைக் காக்கும் மருந்து.

 ஒன்றிணைந்து வாழ்வதற்கான மூன்று வார்த்தைகள்

ஒன்றாக இணைந்து வாழ்வதற்கான மூன்று மனித வார்த்தைகளான, உதவி, மன்னிப்பு, நன்றியினால்,  நாம் மனித நட்பில் அமைதியுடன் முன்னேறுகிறோம். இரக்கத்தின் வார்த்தைகளான மன்னிப்பு, நன்றி போன்றவற்றை நம் வாழ்வில் நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோமா என்பதைப் பற்றிச் சிந்திப்பது நல்லது. இவை மூன்றும் பொதுவானதாக இல்லாததால், தெருவில், கடையில், அல்லது அலுவலகத்தில் ஒரு அன்பான நபரை நாம் சந்திக்கும் போது, நாம் ஆச்சரியப்படுகிறோம், அதிசயமாகப் பார்க்கின்றோம். மற்றவர்கள் மீது கவனம் செலுத்த, ஒரு புன்னகையை பரிசாக வழங்க, ஊக்கமளிக்கும் வார்த்தைகளை வழங்க, நம்பிக்கை கொள்ள வேண்டிய ஒருவரின் பேச்சைக் கேட்க, தங்கள் சொந்த கவலைகளை ஒதுக்கி வைக்கத் தெரிந்த அன்பான மனிதர்கள் இன்னும் இருப்பதற்காக, கடவுளுக்கு நன்றி கூறுவோம்.

அன்பான சகோதர சகோதரிகளே, கருணையை தனிப்பட்ட மற்றும் குடிமை நற்பண்புகளாக மீட்டெடுப்பது குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் நகரங்களுக்குள் வாழ்க்கையை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றது. நம் அனைவரது விருப்பமும் நல்லொழுக்கத்தில் நாம் வளர வேண்டும் என்பதே. கருணை என்பது வாழ்க்கையின் ஒரு  நடைமுறையாக மாறினால், ஆக்கிரமிப்பு மற்றும் அலட்சியத்தை அழித்து, சமூக உறவுகளை மனிதமயமாக்கி ஆரோக்கியமாக நாம் வாழ முடியும்.

 தெய்வீகத்தாய்மை

கன்னி மரியாளின் தெய்வீகத் தாய்மை சாதாரணமானதல்ல. தனது சக்தியை வெளிப்படுத்தி ஆயிரம் வழிகளில் உலகிற்கு வந்திருக்கக் கூடிய கடவுள், சாதாரணக்  குழந்தையைப் போல ஒன்பது மாதங்கள் உருவாக விரும்பி மரியாவின் வயிற்றில் முழு சுதந்திரத்துடன் கருவாக விரும்பினார். இறுதியில், ஒரு பெண்ணிடமிருந்து பிறந்த அவரின் பிறப்பு, மீட்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது. கடவுளின் வழிமுறை, எல்லையற்ற மரியாதை, கருணை ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள முயல்வோம். ஏனென்றால், ஒரு மனித உலகத்திற்கான வழி கன்னியின் தெய்வீகத் தாய்மையில் காணப்படுகிறது..

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கிறிஸ்தவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடலாமா?

  கிறிஸ்தவப் பார்வையில், சூரியனையும் மாடுகளையும் தெய்வமாக வழிபடாமல், அவற்றைப் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இப்பண்டிகைய...